சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி வழங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, பலரும் பல்வேறு சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகையை அறிவித்து இருக்கிறது.

அதன்படி, சென்னை மெட்ரோ ரயிலில் 15,16,17 தேதிகளில் 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வரும் 17ம் தேதி காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகளுக்கு இலவச கேப் (CAB) வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசினர் தோட்டம், டிஎம்எஸ் ரயில் நிலையங்களிலிருந்து மெரினா கடற்கரைக்கு கேப் இயக்கப்படும். காணும் பொங்கலன்று மெரினாவுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதால் சிறப்பு வசதி செய்யப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.