சென்னை: வாடகைதாரர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பெருந்தொற்று காலத்தில், வாடகைதாரர்களிடம் இருந்து வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாதென தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது. வழக்கறிஞர் ஒருவர் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.

ஒரு மாதம் வாடகை வசூல் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இதேபோன்று தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வாடகைதாரரோ வீட்டு உரிமையாளர்களோ யாரும் அணுகாத நிலையில், இதுபொது நல வழக்கு ஆகாது என்று தெரிவித்தனர்.

அரசினுடைய அறிவிப்பில் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டனர். மனுதாரர் கேட்டுக் கொண்டதால், வழக்கை நாளைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.