சென்னை:

ன்லைன் வகுப்புகள் தொடர்பாக  தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசு, தனியார் பள்ளிகள் அனைவரும் விசாரணையில் பங்கேற்கும் விதமாக நாளிதழ்களில் அரசு விளம்பரம் வெளியிடவும் உத்தரவிட்டது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட முடக்கம் 7வது முறையாக தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதுவரை கல்வி நிறுவனங்கள் திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பல தனியார் கல்வி நிறுவனங்களில்  ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இவ்வாறான ஆன்லைன் கல்வியின்போது, இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் வந்து செல்வதால் மாணவர்களின் கவனம் சிதைவதால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புக்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என  பல பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளின்போது,  ஆன்லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் மத்திய அரசுத் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து,  தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், அதுகுறித்து பதில் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழகஅரசின் விதிமுறைகளுக்கு  ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு, “இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருக்கிறது. இதை அமல்படுத்த முடியாது” எனத் தெரிவித்தது.

அதற்கு பதில் அளித்த தமிழகஅரசு வழக்கறிஞர்,  அரசாணையை முழுமையாகப் படிக்காமல், எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து,  இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கூறியதாவது,

“இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகள் அனைத்துத் தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

இந்த வழக்கில், அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ்ப் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது எனத் தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்”

என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.