சென்னை:

பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக  கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லும் என சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு கூறி உள்ளது.

கவர்னரின் பதவி பிரமாணத்தை ஏற்க புதுச்சேரி சபாநாயகர் மறுத்துவிட்ட நிலையில், பாஜகவை சேர்ந்த 3 நியமன எம்எல்ஏக்களும், சபாநாயகர் உத்தரவுக்கு தடை கோரி  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் பல கட்ட விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல்  சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே நிர்வாக பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டு வருகிறது.

தன் உச்சக்கட்டமாக கவர்னர் கிரண்பேடி,  புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் 3 பேருக்கு, நியமன எம்எல்ஏக்கள் பதவி வழங்கி, அவர்களுக்கு இரவோடு இரவாக பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.கடந்த ஜூலை 4-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆனால், அவர்கள் பதவி ஏற்றது செல்லாது என சட்டமன்ற சபாநாயகர், அவர்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க மறுத்தும்,  அவர்கள் சட்டசபைக்குள் நுழைய  அனுமதிக்க முடியாது என்றும் கூறிவிட்டார்,

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபாநாயகரின் ஆணையை ரத்து செய்யக்கோரியும் பாஜக  நியமன எம்எல்ஏக்கள்  சாமிநாதன்,  சங்கர், செல்வகணபதி ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிவடைந்த நிலையில இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி சுந்தர் அமர்வு 3 பாஜக உறுப்பினர்களின் நியமனம் செல்லும் என்று கூறி உள்ளது.

இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயர்நீதி மன்றத்தில் இந்த உத்தரவை ஏற்க முடியாது திருமாவளவன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.