சென்னை: 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அன்று கள்ளப்வோட்டு போட வந்த திமுக உறுப்பினரை தாக்கியதைக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அடுத்தடுத்து வழக்குகள் பாயந்தன. இதனால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வழக்கில் மட்டுமே ஜாமின் கிடைத்த நிலையில், மற்ற வழக்குகளில் ஜாமின் கிடைக்கவில்லை.

இதற்கிடையில்,  திருவொற்றியூர் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக அவர் மீது திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது என சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் கூறியிருந்தார். அந்த புகாரிலும் ஜெயக்குமார் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில், தன்மீதான வழக்குகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டு உள்ளது என்றும், தான் தாக்கியதாக கூறப்படும் நபர் தற்போது வெளியே நடமாடிக்கொண்டிருப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் ஜாமின் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

அதன்படி, முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமார் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.