சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் வழக்குகளில் அரசுத் தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டாலும் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இன்று வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற போது மனுதாரர் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அரசு தரப்பில் வாதங்களைத் தொடங்குவதற்கு நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணை தொடங்குவதற்கு முன்னதாகவே தெரிவிக்காமல் தாமதமாக தெரிவித்ததற்காகவும், இறுதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட வழக்கைத் தள்ளிவைப்பதற்குக் கோரிக்கை விடுத்ததற்காகவும் அரசு தரப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இறுதி விசாரணைக்குப் பட்டியலிடப்பட்ட வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களைத் தொடங்காவிட்டால், அரசின் விளக்கத்தைக் கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், ஏன் அரசு தரப்பு விளக்கம் கேட்கப்படவில்லை என்ற விளக்கமும் அந்த உத்தரவில் குறிப்பிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த விசாரணைக்கு முன்பாக 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தைச் செலுத்திவிட்டு அரசு தரப்பு வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.