துரை

நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மதுரையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 12% முதல் 30% வரை வட்டி வழங்குவதாகவும், பின்னர் இரட்டிப்புத் தொகையை முதிர்வுத் தொகையாக வழங்குகிறோம் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.

அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பி தரவில்லை என புகார் எழுந்தது. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த நிதி நிறுவனம், சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி செய்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவன நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கமலக்கண்ணன், நாராயணசாமி, மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இன்று இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்த போது, நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மக்களின் பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே பணத்தை மீட்க வாய்ப்புள்ளது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதி அனைத்து வாதங்களையும் பதிவு செய்து கொண்டு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.