சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்துள்ளது.

 முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,

“கரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளைத் தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தாக்க முயன்றதாக என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்வதுடன், எனக்கு முன்ஜாமீனும் வழங்கவேண்டும்”

என்று கோரியிருந்தார்.

வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில்,

“எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது இதுவரை 27 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடிமராமத்து பணிகளுக்கான ஒப்பந்தம் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அந்தப் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்துள்ளார். அதிகாரிகளைத் தாக்கவும் முற்பட்டுள்ளார்”

என்று வாதிடப்பட்டது.

நீதிபதி,

“கடந்த 2022-ம் ஆண்டு மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரும் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் எப்படி முன்ஜாமீன் வழங்க முடியும்..?”

என்று கேள்வி எழுப்பி முன்ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மனுதாரர் மீது நிலுவையில் உள்ள 27 வழக்குகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 22 -ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.