சென்னை

எடப்பாடி பழனிச்சாமி மீது கே சி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடியை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே சி பழனிச்சாமி மீது போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலித்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கே சி பழனிச்சாமி இந்த வழக்கில் தன்னை பற்றித் தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

கே சி பழனிச்சாமி இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவின் விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே சி  பழனிச்சாமியைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்து கே.சி. பழனிச்சாமியின் அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்கச் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.