சென்னை:  வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. நாடு முழுவதும் பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் இந்த திட்டத்துக்கு சென்னை மாநகராட்சிஅனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சி யில் ‘டோரன்ட் கியாஸ்’ நிறுவனம் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. சென்னை மாநகராட்சியில் இதை செயல்படுத்த ஆலோசனைகள் மேற் கொள்ளப்பட்டு வந்தன.

இதுதொடர்பாக, சென்னையில் உள்ள சாலைகள், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிடம் இருப்பதால் இந்த திட்டத்துக்கான நிலையான வழி காட்டுதல் நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கியாஸ் குழாய் புதை வடம், மற்ற நிறுவனங்களின் கேபிள்களுக்கும், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை கால்வாய் ஆகியவற்றுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட வேண்டும். கல்வெட்டுகள், பாலங்கள், போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட கூடாது என்பது உள்ளிட்ட வழி காட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சாலையின் குறுக்கே பைப்லைன்களை வரையும்போது அகழி இல்லாத தொழில்நுட்பத்தைப் பின்பற்றுமாறு சேவை வழங்குநர்களுக்கு குடிமை அமைப்பு பரிந்துரைத்துள்ளது; 471 பேருந்து வழித்தடங்களும், 37,000 தெருக்களும் பணிக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன

இதுகுறித்து கூறிய  சென்னை மாநகராட்சி அதிகாரிகள், சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான பரிந்துரை மற்றும் வழிகாட்டுதல் குறித்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி உள்ளது.

சென்னையில் தார் சாலைகள் புதை வடத்தில் கியாஸ் குழாய் இணைப்பு அமைக்க 1 கி.மீ. தூரத்துக்கு ரூ.20 லட்சம் வைப்புத் தொகையும், கான்கிரீட் சாலைக்கு ரூ.21.75 லட்சம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும். சாலை வெட்டுப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள்.  இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளனர்.