சென்னை: சென்னை  மாநகராட்சி பகுதியில்  இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சொத்து வரி, மின்கட்டணம், கழிவுநீர் வரி உள்பட பல வரிகளை உயர்த்தியுள்ளது. சென்னை போன்ற நகர்புறங்களில் சொத்து வரி 50 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டு, வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகிறார்கள். வீடுகள், வணிக நிறுவனங் களிடம் இருந்து ஆண்டு தோறும் 2 முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு மேலும்  ரூ.500 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  ரூ.1,500 கோடி  சொத்து வரி வசூலிக்க நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.  சொத்து வரியை தீவிரமாக வசூலித்து வந்தனர்.

இந்த நிலையில், இதுவரை 1300 கோடி சொத்து வரி வசூல் செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும், இதுவரை சொத்து வரி கட்டாதவர் களிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ஸ் மெசேஸ் அனுப்பி வருவதுடன், மாநகராட்சி அலுவலகர்களைக் கொண்டு வரி வசூலை நடத்தி வருகிறது.  சொத்துவரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்பதால், அதற்குள் சொத்து வரி கட்ட அறிவுறுத்தி உள்ளது.

சொத்துவரியை வசூலிக்கும்படி மார்ச்  1-ந்தேதி முதல்   தீவிரப்படுத்தப்படும். சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும். இந்த ஒரு மாதத்திற்கு இலக்கை அடைய தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், சொத்து வரி செலுத்தாத வர்கள் உடனடியாக செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.