மும்பை: பிசிசிஐ அமைப்பின் நிர்வாக கமிட்டியினர்(CoA), சண்டிகரை 38வது உள்நாட்டு கிரிக்கெட் அணியாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், அந்தப் பெயரில் அந்த அணி எதிர்வரும் நாட்களில் அனைத்து போட்டித் தொடர்களிலும் பங்கேற்கும்.

பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான பொது மேலாளர் சபா கரீம், “இந்த முடிவு தொடர்பாக, ஒருநாள் முன்னதாக சண்டிகரிடம் தெரிவிக்கப்பட்டது. சண்டிகர் அணியினர் இந்த சீசனிலிருந்து அனைத்து பிசிசிஐ போட்டிகளிலும் விளையாடலாம்.

நாங்கள் உள்நாட்டு போட்டிகளுக்கான அட்டவணைகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும், அதில் சண்டிகர் அணியையும் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். அந்த அணி, அனைத்து வயதினருக்கான போட்டிகளிலும் இனி பங்கேற்கலாம்.

நாங்கள் ஒருமுறை ஒரு முடிவை அறிவித்துவிட்டால், அதை செயலாக்கத்தில் கொண்டுவருவதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் எங்கள் தரப்பில் விரிவாக மேற்கொண்டு விடுவோம். அவர்களை தற்போது உள்நாட்டுப் போட்டிகளுக்காக இணைத்துள்ள நிலையில், தங்கள் இடத்தில் அவர்கள் எங்கெங்கு விளையாட விரும்புகிறார்கள் என்ற பட்டியலை அவர்கள் தயார் செய்ய வேண்டும்” என்றார் அவர்.