சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 2 நாட்கள் (20ந்தேதி வரை) பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகம் தெரிவித்து உள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மற்றும் நாளை மறுதினம் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றுமுதல் மேலும்,2 நாட்களுக்கு (20-ஆம் தேதி வரை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்படி, நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மித்தனமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.