சென்னை:
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது.

இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழைய பெய்யக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதி, கேரள கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.