சென்னை: தமிழகத்தில் திமுக வந்த பிறகுதான் ஜாதி அரசியல் வந்தது என்று குற்றம் சாட்டி உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 37மாவட்டங்கள், 335 கிராமங்களில் ஜாதி வன்முறைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது என்று பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கொலை சம்பவங்கள் மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக கூறி வந்தாலும், பெட்டிகடைகள் முதல், காவல்வாய் ஓரங்கள் வரை பல இடங்களில் கஞ்சா உள்பட போதை பொருட்களை விற்பனை அரசியல் கட்சியினரின் ஆசியோடு வெகுஜோராக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில தலைவர் அண்ணாமலை,  தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கொலை, ஜாதிய வன்முறைகள் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். இதைத்தான் 25 ஆண்டுகளாக தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்தவர்,  தமிழகத்தில் 37மாவட்டங்கள், 335 கிராமங்களில் ஜாதி வன்முறைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. கடந்த 30 நாட்களில், தென் தமிழகத்தில் 23 படுகொலைகள் நடந்துள்ளது. இதுதான் திமுகவின் ஜாதி ஒழிப்பு என்று கடுமையயாக சாடியுள்ளார்.

திமுக கட்சி ஏன் தொடங்கப்பட்டது என்ற உண்மை வரலாறு மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டில், சனாதன தர்மத்தை எதிர்ப்போம் என்பார்கள். இரண்டாவது ஆண்டில் சனாதான தர்மத்தை வேரறுப்போம் என்பார்கள். மூன்றாம் ஆண்டில் சனாதான தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம் என்பார்கள். நான்காவது ஆண்டில், எங்கள் கட்சியில் 90% இந்துக்கள் என்று மண்டியிடுவார்கள். ஐந்தாவது ஆண்டு முருகப் பெருமானின் வேலை கையில் தூக்கிக் கொண்டு வீரவேல் வெற்றிவேல் என்று காவடி எடுப்பார்கள்.

மேலும், தமிழகத்தில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார். தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் எண்ணிக்கை 44,000. அற நிலையத் துறை சாராத மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இவற்றில், எங்கு கும்பாபிஷேகம் நடந்தாலும், திமுக தன் கணக்கில் சேர்த்துக் கொள்கிறார்கள். இது தொடர்பான வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பதில் இல்லை.

திமுக, தேர்தல் வாக்குறுதியில் இந்து கோயில்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறினார்கள் ஆனால் இரண்டு ஆண்டில் 55 கோடி தான் ஒதுக்கி இருக்கிறார்கள். 1986 ஆம் ஆண்டு, நீதிமன்றத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 5.25 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாகக் கூறினார்கள். தற்போது, 2023 இல், அது 4.76 லட்சம் ஏக்கர் நிலமாக மாறி இருக்கிறது. 47 ஆயிரம் ஏக்கர் நிலம் எங்கே போனது?

தமிழகத்தில் அறநிலையத்துறை மூலம் வரும் வருமானம் 400 கோடியை தாண்டியது இல்லை. முறையாக நிர்வாகம், செய்தால் ஐந்தாயிரம் கோடி வருமானம் வந்திருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…

எங்கே சமத்துவம்? அரசு கல்லூரிகளில் சாதி பாகுபாடு: 3 பேராசிரியர்கள் இடமாற்றம்!