நாங்குநேரி சம்பவம் தொடர்பாக, டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், நாங்குநேரியில் மாணவர்களுக்கு இடையே பள்ளி வளாகத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். பின் மாணவரின் தாய் பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார். இதை மனதில் வைத்து ஆகஸ்ட்.9-ம் தேதி அந்த மாணவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளஞ்சிறார்கள், அவதூறாக பேசி அரிவாளால் தாக்கி ரத்தகாயம் ஏற்படுத்தி உள்ளனர். தடுக்க வந்த மாணவரின் தங்கையையும் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவனும், அவருடைய தங்கையும் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபட்ட 6 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மாணவ மாணவியர்களிடையே பள்ளி கல்லூரிகளில் காவல்துறை, கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.