புதுச்சேரி

அவசர கதியில் புதுச்சேரியில் சி பி எஸ் இ பாடத்திட்டம் அமல் படுத்தப்படுவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை தமிழக அரசின் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வந்தது.  தற்போது அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு தமிழக அரசின் பாடத்திட்டத்தைக் கைவிட்டு விட்டு இனி சி பி எஸ் இ பாடத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா,

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை 2023–24 கல்வியாண்டில் புதுச்சேரி அரசு நடைமுறைக்குக் கொண்டு வருவது ஏன்? 1–ம் வகுப்பு முதல் 9–ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ்–1–ல் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தினால் 8–ம் வகுப்பு வரை தமிழக பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் 9–ம் வகுப்பை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து அடுத்த கல்வியாண்டில் 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை அவர்களால் எப்படி எழுத முடியும். மதிப்பெண்கள் குறையாதா?.

எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழை விருப்பப் பாடமாக அறிவித்திருப்பது தமிழை அழிக்க நினைக்கும் பாஜகவின் கொள்கையாகவே இதை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவித்திருப்பது போல் புதுச்சேரியிலும் அறிவிக்கப்பட வேண்டும். திட்டமிட்டே தமிழை பின்னுக்குத் தள்ள வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுவதை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழ் அழியும் என்பதைப் புதுச்சேரி அரசு உணர வேண்டும்.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை மற்றும் பயிற்சி பெற்ற போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலையில் எப்படி சிபிஎஸ்இ கல்வி முறையை முழுமையாக செயல்படுத்த முடியும். தற்போதுள்ள நிலவரப்படி ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிப்பை நோக்கிப் பயணிக்கும் கல்வி நிலையங்கள் இந்த நடைமுறையை எப்படி எதிர்கொள்ளும்.

மேலும் மாணவர்களது கல்வி முன்னேற்றத்துக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பதை அரசு உணராமல் அவசரகதியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்துவதைப் புதுச்சேரி அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழியின் சிறப்பை நடைமுறையில் பயிலும் மாணவர்களுக்கும், எதிர்கால மாணவ சமுதாயமும் அறிந்து கொள்ளக் கூடாது என்கின்ற மாற்றாந்தாய் மனப்பான்மையை நீக்கி புதுச்சேரியிலும் தமிழை கட்டாயப்பாடமாக பயிலுவதற்கு உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும்.” 

எனக் கூறி உள்ளார்.