சென்னை:

காவிரி விவகாரத்தில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்தியஅரசை வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் மேற்கொள்கிறார்.

இதையொட்டி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அதற்கான  காலக்கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை.  மத்திய அரசின் எதேச்சதிகார முடிவை எதிர்த்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி,  தி.மு.க உள்பட கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து திருச்சியிலிருந்து காவிரி மீட்பு பயணம் மேற்கொள்வதறாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று  திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து ஒரு பயணமும், வரும் 9-ம் தேதி, அரியலூர் மாவட்டத்திலிருந்து இன்னொரு பயணமும் புறப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த பயணத்தின்போது,  அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திமுக தலைவர்  கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின், காவிரி மீட்பு பயணம் குறித்த விவரங்களை எடுத்துக் கூறி ஆசி பெற்றார்.