காவிரியில் தண்ணீர் திறந்துவிடும் பிரச்சினையில் தமிழகம், கர்நாடகம் இடையே ஏற்பட்டுள்ள மோதலை தீர்க்க இஸ்ரேல் யோசனை கூறி உள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே ஏற்பட்டுள்ள  பகையுணர்வு நாட்டின் தேசிய ஒற்றுமைக்கே கேடு விளைவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது, எங்களுக்கு  குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என கூறி உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக ஏற்க மறுத்து வருவதால் இருமாநில உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இருமாநிலங்கள் இடையிலான நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் ஏற்க அம்மாநிலம் மறுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு போக பாசனம் கூட செய்யமுடியாமல் தமிழக விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்கள் இடையிலான எழுந்துள்ள பிரச்சனையை தீர்த்து வைக்க இஸ்ரேல் நாடு முன்வந்துள்ளது. தங்களது தொழில்நுட்பங்களும்,  செயல் முறைகளும் முழு பலன் அளிக்கும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
soddu-neer
இது குறித்து இஸ்ரேல் கூறுகையில், அதிக நீரை கோரக்கூடியதான கரும்பை கர்நாடகாவில் பயிரிடுவதும், அதேபோல் அதிக நீர் தேவைப்படுவதான நெல்லை அதிகளவில் தமிழகத்தில் பயிரிடுவதுமே பிரச்சனைக்கு காரணமாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சனையை சொட்டுநீர் பாசன முறையில் எளிதாக தீர்த்துவிட முடியும் எனவும் அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை போன்றவற்றின் மூலம் இந்த சிக்கலை எளிதில் தீர்த்துவிட முடியும் எனவும் இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நதிநீர் மேலாண்மை திட்டங்களில் உதவுவது தொடர்பாக இந்திய அரசிடம் ஏற்கனவே இஸ்ரேல் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய அரசு அனுமதி அளித்தால் தங்களது திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மூலம் பிரச்சனையை எளிதில் தீர்க்க முடியும் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யோசிக்க வேண்டிய தருணம்…. யோசிப்பார்களா  அரசியல்வாதிகள்….. அதிகாரிகள்…..