மேட்டூர்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து விநாடிக்கு 29000 கன அடி ஆகி உள்ளது.

சமீபத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்தது.  இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

கடந்த 16-ந் தேதி  தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. பிறகு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாகக் குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது.

மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலையில் அணைக்கு வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடியும் தண்ணீரும் திறக்கப்பட்டது.

மழை தொடர்வதால் தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 29 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.  இதையொட்டி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 28 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.