சென்னை

விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை அமுல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிக வர்த்தகம் நிகழ்வது டாஸ்மாக் எனப்படும் அரசு மதுக்கடைகளில் என்பது அனைவரும் அறிந்ததே.   சாதாரண நாட்களில் ரூ.70 கோடி வரையிலும் விடுமுறை தினங்களில் ரூ.100 கோடி வரையும் மதுவகைகள் வியாபாரம் ஆகின்றன.   அனைத்தும் ரொக்கப் பரிவர்த்தனையிலேயே நடை பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பீட்டுக் குறைவுக்குப் பின் அனைத்து வர்த்தகங்களிலும் ரொக்கமற்ற பரிவர்த்தனை நடக்க ஆரம்பித்த போதிலும்.  அது டாஸ்மாக் கடைகளில் பின்பற்றப் படுவதில்லை.   இது குறித்து பலரும் புகார் தெரிவித்த நிலையில் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இயந்திரங்கள் அளிக்கப்பட்டு ரொக்கமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரி, “சென்னை போன்ற பெருநகரங்களில் சில நவீன மதுக்கடைகளில் ஏற்கனவே கார்டுகள் தேய்க்கும் இயந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.   ஆனால் அவைகள் இருப்பதையே ஊழியர்கள் தெரிவிப்பதில்லை.  இதற்கு முக்கிய காரணம் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு ஊழியர்கள் விற்பதே.  அதனால்தான் அவர்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனையை எதிர்க்கின்றனர்.

விரைவில் அரசு அனைத்து கடைகளிலும் இந்த இயந்திரம் வழங்க உத்தேசித்துள்ளது.   இதனால் உடனடியாக பணம் டாஸ்மாக்கில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விடும்.  ஊழியர்கள் அதிக விலை வைத்து விற்பது தடுக்கப்படும்.   அது மட்டுமின்றி பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெறுவதும் இதனால் அடியோடு குறைந்து விடும்” என தெரிவித்துள்ளார்.