சென்னை:
கொரோனா ஊரடங்கில் இருந்து மதுக்கடை திறப்பு உள்பட பல்வேறு கடைகள் திறக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்கையும் திறக்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்,  கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்த போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் உணர வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததுடன் வழக்கை ஒத்தி வைத்தது.
சமூக ஆர்வலர் ஆர்.கே.ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு,   சிறு, குறு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கடைகள் போன்றவை  கட்டுப்பாட்டுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளி, கல்லூரிகள், மத வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதித்த அரசு, மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் வழிபாட்டுத்தலங்களைத் திறக்க அனுமதிக்கவில்லை.
இதனால் ரமலான் நோன்பு காலத்தில் கூட பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்குச் செல்ல முடிய வில்லை. எனவே சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறகக்க அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா ஆகியோர்  அமர்வில் விசாரணைக்கு வந்தது.  வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,  வரும் மே 17- ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைகிறது. அதற்கு முன்பாக வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது குறித்து மே 15 அல்லது மே 16 ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுக்கும் என கூறப்பட்டது.
இதனையடுத்து , மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 18- ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள்,  கோயம்பேடு காய்கறி சந்தை மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்த போது சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் உணர வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.