புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பாஜகவினர் நியமன எம்எல்ஏக்களாக மத்தியஅரசு  நியமனம் செய்துள்ளதை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 10 தொகுதிகளைக் கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, பாஜக எம்எல்ஏக்கள் 6 பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. மாநில முதல்வராக ரங்கசாமி கடந்த 7ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 10ஆம் தேதி கொரோனா பாதித்து, சென்னை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த கே.வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம், ஆர்.பி.அசோக் பாபு ஆகிய மூவரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெகநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “புதுவை முதல்வர் ரங்கசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அமைச்சரவையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்காத நிலையில், 3 நியமன சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்க எந்த அவசரமும் இல்லை.

பதவியேற்கும் முன்பே, இந்த மூன்று எம்எல்ஏக்களும் தலைமைச் செயலாளர் மற்றும் துணைநிலை ஆளுநருடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். சட்டப்படி, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், சீர்திருத்தவாதிகளை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்க வேண்டும்.   3 நியமன எம்எல்ஏக்கள் நியமனம் தொடர்பான உத்தரவைச் செல்லாது என அறிவித்து அதற்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.