சென்னை:
ர்ச்சை விமர்சனம் செய்து தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் மற்றும் ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டி சூடுபிடித்திருக்கும் நிலையில், திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர் தேவைப்பட்டார், அவர்தான் பிரதமர் மோடி” என தனது பேச்சில் குறிப்பிட்டார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹுவிடம் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஆ.ராசா, ”முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஸ்டாலினையும் முதல்வரையும் அரசியல் குழந்தையாக ஒப்பிட்டு பேசிய எனது பேச்சை வெட்டியும் ஒட்டியும் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக திமுக எம்.பி ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்யத் தூண்டிவிடுதல், தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திமுக எம்.பி ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.