சென்னை:

துவினால் பல்வேறு குற்றங்கள் நிகழ்வதாக சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, இதுபோன்ற  குற்றங்களுக்கு தமிழக அரசை பொறுப்பாக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

குடியால் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேர் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கில், சிலர் முன்ஜாமின் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், அவர்களுக்கு ஜாமின் வழங்கிய நிலையில், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேஷ்,  தமிழகத்தில், மாநில அரசே மதுபான கடை நடத்தி சொந்த மக்களுக்கு விற்பனை செய்து ஆண்டுக்கு 31 ஆயிரத்து 751 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட்டி வருகிறது என்றவர், இது  துரதிருஷ்டவசமானது என கூறினார்.

தேசிய சுகாதார பணிகள் துறை ஆய்வுபடி, தமிழகத்தில் 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமை யாகி  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை கோடிட்டு காட்டிய நீதிபதி, குடிபோதை காரணமாகவே  விபத்துக்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்னை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது என்றும் கவலை தெரிவித்தார்.

தமிழக அரசு   மது கொள்கையில் மாற்றங்களை கொண்டு வராவிட்டால், இந்த குற்றச் சம்பவங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியவர், மதுவை விற்கும் தமிழக அரசை இந்த குற்றச் சம்பவங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மது போதையில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என்று எச்சரித்த நீதிபதி, இதுபோன்ற  குற்றச் சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன் அபராதமும் விதிக்க முடியும் என தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.