சென்னை: நடிகர் சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த  மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் எச்சரித்து விட்டுவிட்டனர்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீடு சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ளது.  இவர் வீட்டிற்கு  வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து சரத்குமார் வீட்டுக்கு மோப்ப நாய் உதவியுடன் சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு ஏதும் கிடைக்காததால்,  வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது .

இதைத்தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து சைபர் கிரைம் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். இதில், மிரட்டல் விடுத்த டெலிபோன எண் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மணிபாலன் என்பவருடையது  என தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் புவனேஸ் என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்ததும்,  இனிமேல் இப்படி தெய்யாத படி பார்த்துக்கொள்ள வேண்டுமென்று உறவினர்களிடம் எழுதி வாங்கிவிட்டு, அவரை எச்சரித்துவிட்டு விடுவிடுத்துவிட்டனர்.