சென்னை:

போகி பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட பல இடங்களில் பனி மூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று போகியால் ஏற்பட்ட புகை காரணமாகவும் சென்னை முழுவதும் சாலைகளே தெரியாத அளவில் புகை பரவி இருந்தது.

இதன் காரணமாக சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் முன்னால் வரும் வாகனங்களை காண முடியாத சூழல் உருவானது.  வாகன ஓட்டிகளை வாகனங்களை இயக்க  கடும் சிரமப்பட்டனர்.

பல இடங்களில் வாகனங்கள் ஊர்ந்தே சென்றன.

மேலும், பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் சென்னையில் விமானம் இறங்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய வெளிநாட்டு விமானங்களும் இதுவரை புறப்படவில்லை.