டெல்லி: தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று பதவி ஏற்கும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6நதேதி  மற்றும் 9 ஆம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையானது கடந்த 12 ஆம் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்ற நிலையில், அதிமுக கூட்டணியும் சில இடங்களை கைப்பற்றி உள்ளது.

இந்த தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி  8 யூனியன் கவுன்சிலர், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்கள் இடங்களை பிடித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினரை சந்தித்து தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். இந்j நிலையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள்  கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்.  எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.