டெல்லி:

ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி பதவி காலம் முடிகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலை சந்திக்க ஆளும் பாஜ கூட்டணி கட்சிகளும், எதிர்கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பாக எதிர்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்று பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை இணைந்து ஒற்றுமையுடன் அறிவிக்கும் வகையில் எதிர்கட்சி உள்பட அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் யார்? என்பதை தற்போது கூற முடியாது. இது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தப்படும். பின்னர் எதிர்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார்.

இந்துத்வா கொள்கையுடனான வேட்பாளரை பாஜ நிறுத்தினால் மதசார்பற்ற வேட்பாளரை காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து நிறுத்த முடிவு செய்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலுக்கு மொத்தம் 11 லட்சத்து 4 ஆயிரத்து 546 வாக்குகள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளிடம் தற்போதைய நிலவரப்படி 5.38 லட்சம் வாக்குகள் உள்ளன. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமீதி ஆகிய கட்சிகள் ஆதரவு கிடைத்தால் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுவிடும்.

அதோடு தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக.வின் இரு அணிகளின் ஆதரவையும் பெறலாம் என்ற நம்பிக்கையில் பாஜ உள்ளது. ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலையில் நட க்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

துணை ஜானதிபதி தேர்தலுக்கு ராஜ்யசபா, லோக்சபா இரு அவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையான 787ல் 418 வாக்குகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.