சென்னை: பாஜக அரசு இயந்திரமான வருமானவரித்துறை தவறாக பயன்படுத்தி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றன என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சன் குற்றஞ்சாட்டினார்.

தமிழகத்தில் தேர்தலையொட்டி பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் ரவுண்டுகட்டி சோதனைகளை நடத்தி வருகிறது. திமுக, அதிமுக, என அனைத்து கட்சியினர் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், இன்று உச்சக்கட்டமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு மற்றும் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, அண்ணாநகர் மோகன் உள்பட 15 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்,  திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அலுவலரிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர்  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வில்சன், “தமிழ்நாட்டில் வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் வீடு மற்றும் திமுக நிர்வாகிகள் வீடுகளில் சோதனையிட்டு வருகின்றனர். ஆனால் இந்தச் சோதனையை ஒரு மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வருமான வரித்துறையினர் நடத்தாமல், தேர்தலுக்கு நான்கு நாள்கள் இருக்கும்போது நடத்துவது பாஜக, அதிமுக அரசுகளின் தூண்டுதலின் பெயரில் உள் நோக்கத்துடன் நடப்பதாகவே தெரிகிறது. பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் அரசு இயந்திரமான வருமானவரித்துறை தவறாக பயன்படுத்தி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுகின்றன.

இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் உள்ளது. திமுக இந்த வருமான வரி சோதனையைக் கண்டு அச்சம் கொள்ளாது. திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது” என கூறினார்.