சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து கேளம்பாக்கம் சுசில்ஹரி பள்ளி நிறுவனர், சிவசங்கர் பாபாவின் கோடிக்கணக்கான  சொத்துக்களை கைப்பற்ற பாஜக தலைவர் கே.டி.ராகவன் முயற்சி செய்வதாக, பாபாவின் சீடரான  நடிகர் சண்முகரா பகீர் தகவலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய  சிவசங்கர் பாபா அறநெறி இயக்கத்தின் தலைவர் சண்முகராஜா,  மாநில பாஜக பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் மீதும், பாபாவின் நிறுவன அட்மின் ஜானகி என்பவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து உள்ளார்.

சம்ரட்சணாவின் அட்மின் பொறுப்பிலிருக்கும் ஜானகி சீனிவாசன் சாதிய மனோபாவத்துடன் கடந்த 20 ஆண்டுகளாக பாபா மீது பக்தியுடன் இருந்த அடித்தள மக்களை விரட்டி அடிப்பது பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்து சான்றிதழ் கொடுத்து அனுப்பும் செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், மேலும், அவர் கட்டிட பணியில் இருந்து எல்லா பணிகளையும் ஊழல் செய்து கமிஷன் அளிப்பது என குற்றங்களில் ஈடுபட்டு வருவவதாக தெரிவித்தவர்,   ஜானகியின் அத்தனை செயல்களுக்கும் பாஜகவை சேர்ந்த கே.டி ராகவன் துணையாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

பாபாவை கைது செய்ய முடியாது என்று கூறியவர்கள், பின்னர் கைது செய்தவுடன் 3 நாளில் வெளியே வந்துவிடுவார் என்று கூறி ஏமாற்றியதாகவும்  கூறும் சண்முகராஜா, கேடி.ராகவனின் 30க்கும் மேற்பட்ட அடியாளட்கள் பாபாவின் ஆசிரமத்தில் தங்கி, மற்றவர்களை மிரட்டி வருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

சிவசங்கர் பாபா சிறையில் இருக்கும் சமயத்தில், கேடி.ராகவன் ஆதரவுடன்  ஜானகி குழுவினர் பிராமணர் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து பாபாவின் சொத்துக்களை அபரிக்க  முயற்சி செய்து வருகின்றனர், சாவி கொடுக்க மறுத்த பிற சாதியினரின் கோயில் கதவுகளை உடைத்து கோயில்கள் அத்துமீறி நுழைந்து உள்ளதாக குற்றம் சாட்டினார்.

குகை நமச்சிவாயர் கோயில் கதவை உடைத்ததை தட்டிக் கேட்ட பெண்மணியினரை தாக்கியதாகவும் மேலும் அந்த சம்பவம் நடந்தபோது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கேடி ராகவன் அடியாட்களுடன் இருந்ததாக தெரிவித்த சண்முகராஜா இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.

பாபா மீது பொய் வழக்குகளை போட்டு, அவரது சொத்துக்களை கைப்பற்றும் வகையில்,  அவர்கள் செயல்படுகிறார்கள், வழக்குகள் ஜோடிக்கப்பட்டு உள்ளது கூறிய சண்முகராஜா, அட்மின் ஜானகியின் உத்தரவில்லாமல் வளாகத்தில் அணுவும் அசையாது அப்படி இருக்கையில் ஜானகியின் அவரது கூட்டாளிகளும் கைது செய்து விசாரித்தால் புதிய திருப்பங்கள் உருவாகும் என பகீர் தகவல்களை தெரிவித்து உள்ளார்.