சென்னை

டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி  குறித்து ஆபாச பதிவு இட்ட பாஜக பிரமுகர் கல்யாண ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிவிட்டரில் பாஜக பிரமுகரான கல்யாணராமன் தொடர்ந்து ஆபாசமான சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவு செய்து வந்துள்ளார்.   இவர் கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் பாஜக கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

நேற்று மாலை இவர் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரை பற்றி  சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  தவிர திரைப்பட நடிகை மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமான முறையில் பேசியுள்ளார்,

இதையொட்டி திமுகவின் தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரின் உதவியாளர் சந்தோஷ் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர், மருத்துவர் ஷர்மிளாவை ஆபாசமாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். எனவே அவரை உடனே கைது செய்யவேண்டும் என சென்னை சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்ட 10 மணிநேரத்தில் கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.