சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை  கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும்  வரும் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார்.

தி.மு.க. அரசு தேர்தலின்போது  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் “மனசாட்சி இல்லாத ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசினை கண்டித்து” ஜூலை 5ம் தேதி அன்று மாவட்டம் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, வடசென்னை மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.   வடசென்னை கிழக்கில் பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ்,  தென்சென்னையில் கராத்தே தியாகராஜன், சென்னை கிழக்கில் எம்.என்.ராஜா, மத்திய சென்னை கிழக்கில் வினோஜ் பி.செல்வம், மத்திய சென்னை மேற்கில் சக்கரவர்த்தி, சென்னை மேற்கில் கரு.நாகராஜன்,

வேலூரில் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, கிருஷ்ணகிரியில் முன்னாள் எம்.பி. நரசிம்மன் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.

திருச்சி நகரில் நடக்கும் போராட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

சிவகங்கையில் எச்.ராஜா, தேனியில் மீனாதேவ், கன்னியாகுமரியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நெல்லையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொள்கின்றனர்.

கோவையில் சி.பி.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், ஈரோடு தெற்கில் டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ., பாயிண்ட்மணி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.