விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பிக்பாஸ்”  நிகழ்ச்சி குறித்து ஆரம்பத்திலிருந்தே கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரர் இந் நிகழ்ச்சியை கண்டித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவி்ட்டிருக்கிறார்.

அவரது முகநூல் பதிவு:

“பிக்பாஸ்” அடிக்‌ஷனிலிருந்து வெளியே வந்திருக்கிறேன்.

இனி கமல் வரும் நாட்களில் மட்டுமே எட்டிப் பார்ப்பதாகத் திட்டம்.

இந்த முடிவுக்குக் காரணமும் பிக் பாஸ்தான். டாஸ்க் என்கிற பெயரில் அங்கு இருக்கும் போட்டியாளர்களை கிட்டத்தட்ட அடிமைகள் போல நடத்தும் சர்வாதிகார மனப்பான்மையில் எனக்கு ஒப்புதலில்லை.

என்னதான் காமெடி, சுவாரசியம் என்று நினைத்து அமைத்திருந்தாலும் அவர்களை திடீரென்று இப்போது முதல் நீங்கள் பைத்தியங்கள் போல நடிக்க வேண்டும் என்று உத்தரவிடுவதெல்லாம் டூ மச்.

தெருவில் வித்தை காட்டுபவனின் கோலுக்கும் அதட்டலுக்கும் குரங்குகள் சேட்டை செய்யும் காட்சி நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

வெற்றி பெற்றால் கிடைக்கவிருக்கும் புகழ், பணத்தை மனதில்கொண்டு அவர்கள் இதில் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சுய மரியாதை இருக்கிறது.

இனி வரும் பகுதிகளிலாவது போட்டியாளர்களின் கண்ணியத்தைக் காயப்படுத்தாமல் டாஸ்க்குகளை அமைக்கட்டும்!

எனக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மிச்சம்!”