சென்னை: அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதற்கான திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்த நிலையில், தற்போது பிரசாதம் வழங்க உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின்கீழ் முக்கிய திருக்கோயில்களில் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு உபயதாரர்கள் நன்கொடை வரவேற்கப்படுகின்றன. கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது முக்கிய திருக்கோயில்களில் தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக சென்னை, வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் கடந்த சனிக்கிழமை  அன்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று, சீரிய முறையில் தனிக் கவனத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்க பல நன்கொடையாளர்கள் முன்வருவதால் இத்திட்டத்தை செயல்படுத்தும் திருக்கோயில்கள் இதற்கான நன்கொடை தொகை யினை கணக்கிட்டு “நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தில் உபயதாரர்களும் பங்கு பெறலாம்” என்ற அறிவிப்பு பலகைகள் திருக்கோயில் வளாகத்தில் பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் ஆங்காங்கே வைக்கப்படும்.

பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் தங்கள் இல்லங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளான திருமண நாள், பிறந்தநாள், நட்சத்திர நாள் அன்று திருக்கோயில் களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நன்கொடை  அளிக்கலாம். பிரசாதம் வழங்கும் திட்டத்திற்கு நன்கொடை அளிக்கும் உபயதாரர்களின் பெயர்கள் ஒரே நாளில் இருப்பின் அவர்கள் அனைவரின் பெயரும் காட்சிப்படுத்தப்படும்.

இதில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, லட்டு, வெண் பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள்  திருக்கோயில் களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள் தோறும் வழங்கப்படும், இதனால் 10000 முதல் திருவிழா காலங்களில் 25000 மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களை பெற்று பயனடைவார்கள் அதற்கு தகுந்தார் போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறைவனை தரிசித்துவிட்டு வெளியில் வரும் பாதைக்கு அருகில் கூட்ட நெரிசல் இல்லாத இடத்தில் முதியோர்கள் முதல் குழந்தைகள் வரை பிரசாதம் உண்டு மகிழ்கின்றனர். இத்திட்டம் இன்னும் பல திருக்கோயில்களில் விரிவுப்படுத்தப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும், கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு வரிசை அமைப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டு, திருக்கோயில் பணியாளர்கள் தூய்மையான முறையில் கையுறைகள் அணிந்து பிரசாதம் வழங்குவர் பிரசாதம் வழங்கும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக இருத்தல் வேண்டும் என்று  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.