சென்னை: வங்கக் கடலில்  உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறும் என்றும், 4ந்தேதி மாலை கரையை கடக்கும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வந்தது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து நாளை மறுதினம் ( டிச. 3) புயலாக மாறும் என்றும், அதற்கு  ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த புயல் டிச. 4-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும், இதனால் சென்னை உள்பட ஆந்திர கரையோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (டிசம்பர் 01, 2023) காலை 05.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தென்கிழக்கை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் அட்சரேகை 9.1°க்கு அருகில் நிலவி வருகிறது.

மேலும் தீர்க்கரேகை 86.4°E, புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 790 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீ., பாபட்லாவிலிருந்து தென்கிழக்கே 990 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, 2-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாகவும் மாறும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடற்கரையை சென்னைக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 4 ஆம் தேதி மாலையில் சூறாவளி புயலாகக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டிசம்பர் 2-ம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் காலை 10 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.