திருச்சி: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு சத்துணவுடன் வாழைப்பழம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும்,  கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.

திருச்சி பகுதியில்  அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 நாட்களில் 1,500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்றுகூறியவர்,பல தனியார் பள்ளிகளில் 100 சதவிகிதம் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளன. அப்படி, 100% கட்டாய கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இந்த புகார் தொடர்பாக  தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருகிறேன். அதற்கான அறிக்கையினை வரும் 1ஆம் தேதி முதல் முதல்வரிடம் சமர்பிக்க உள்ளேன் என்றார்.

தான் முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ள ஆய்வறிக்கையில், மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்தும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது குறித்தும் இடம்பெறும் என்று தெரிவித்தார். வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முதல்வரிடம் இதனை பரிந்துரைக்கும் உள்ளதாகவும் கிராமப்புற பள்ளிகளில் குடிநீர்த் தேவைக்கான பணியாளர்களை நியமிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்க உள்ளதாகவும்  கூறினார்.