ra
நமது நக்கீரன் குழமத்தில் இருந்து வெளிவரும் இனிய உதயம் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் இனிய உதயம் இதழில் 1996ம் ஆண்டு ஜூகிபா என்ற கதையை எழுதியிருந்தார். பின்னர் 2010ல் எந்திரன் படம் வெளியான பிறகு ஜூகிபா கதையை தன்னிடம் அனுமதி பெறாமல் கதையை தழுவி படம் எடுத்திருப்பதாக காப்புரிமைச் சட்டத்தின்படி தனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குநர் சங்கர், கலாநிதிமாறன் மற்றும் சன் பிச்சர்ஸ் ஆகியோருக்கு எதிராக ஆருர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சன் பிச்சர்ஸ் தோன்றாத் தரப்பினராக அறிவித்து 29.10.2015 அன்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து ஆரூர் தமிழ்நாடான் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது பிரமான வாக்குமுலத்தையும், ஆவணங்களையும் சமர்பித்தார்.
தற்போது தம்மை தோன்றாத் தரப்பினராக அறிவித்ததை நீக்கி உத்தரவு செய்யும்படி கலாநிதி மாறன் மற்றும் சன்பிச்சர்ஸ் மனு செய்திருந்தனர். இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுமார் 5 வருடங்களுக்கு மேலாக பதிலுரையும் தாக்கல் செய்யாததை நீதிமன்றம் கண்டித்து ரூ.25 ஆயிரம் அபராதமாக சன்பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு விதித்தார். இந்த தொகையை 8.6.2016க்குள் மானாமதுரை தொழு நோயாளிகள் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
ஆருர் தமிழ்நாடான் சார்பாக வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள். எல்.சிவக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.