பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுடன் சிறைக்கு சென்ற அவரது  உறவினர் இளவரசியின் தண்டனை காலம் முடிந்த நிலையில், இன்று விடுதலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானத்தை மீறி சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வருக்கு உடந்தையாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நீதிமன்றம்  தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது.  இவர்கள் கடந்த 2017ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களின் சிறை தண்டனைக்காலம் முடிவடைந்துள்ளது.  அபராதத் தொகையும் செலுத்தப்பட்டு விட்டது.

இதைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா ஜனவரி 27ந்தேதி விடுதலையானார். அதைத் தொடர்ந்து, இளவரசி இன்று விடுதலையாகிறார்.  இவர்கள்  வரும் 8 ஆம் தேதி சென்னை வருவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று சசிகலா உடனிருந்த இளவரசி விடுதலை செய்யப்படுகிறார் என பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இளவரசி இன்று காலை 11 மணி அளவில் சிறையில் இருந்து விடுதலை ஆவார் என தெரிகிறது.

இளவரசி ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனர் விவேக்கின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.