சென்னை: சட்டசபை கூட்டத்தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தின் சட்டமன்ற வளாகத்தில் ஜனவரி  2-ந்தேதி எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தின் புத்தாண்டு கூட்டத்தொடர் ஜனவரி 5ந்தேதி தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார். இதையடுத்து, சட்டமன்ற  கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, ஜனவரி 2ந்தேதி மற்றும் 3ந்தேதி ஆகிய இரு நாட்கள் தலைமைச்செயலகம் சட்டமன்ற வளாகத்தில் கொரோனா சோதனை முகாம் நடத்தப்பட உள்ளது.  மேலும், எம்.எல்.ஏ. விடுதியிலும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில், சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

மேலும், இந்த பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான், பேரவை மண்டபத்துக்குள் செல்ல முடியும் என்றும்,  முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை 5-ந்தேதி தொடங்க இருப்பதையொட்டி அங்கு முதல்- அமைச்சர் ஆலோசிக்கும் அறை, எதிர்க்கட்சி தலைவருக்கான அறை, எம்.எல். ஏ.க்களுக்கான அறையும் தலைமை செயலகத்தில் புதுப்பிக்கப்பட்டு அந்த பணியும் முடிவுறும் தருவாயில் உள்ளது. சட்டசபை வளாகமே வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவாக்கப்பட்டு வருகிறது.