சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய போட்டியில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட அனைத்து பதக்கங்களையும் இந்திய வீரர்களே பெற்றுள்ளனர்.

இந்திய வீரர் சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கதையும், மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கத்தையும், கோவிந்த்பாய் ராம்சிங்பாய் பதியார் 1.78 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“#AsianParaGames2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி 🥈வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்!” என்று முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டு வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த பிரிவில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.