‘டைரி’ படத்துக்குப் பிறகு அருள்நிதி, புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இதனை விஜய் பாண்டி மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் தயாரித்து வந்தார்கள்.

இன்று (ஜூலை 21) அருள்நிதி பிறந்தநாளை முன்னிட்டு அருள்நிதி – அரவிந்த் இருவரும் இணைந்துள்ள படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘தேஜாவு’ என இந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் அருள்நிதி கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில், மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து ‘தேஜாவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள்.