சென்னை: அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.மேலும், தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு  தமிழகத்தில்  கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், இறுதியாண்டு தேர்வு தவிர பல தேர்வுகள் ரத்து செய்வதாக தமிழகஅரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து, அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, அவர்கள்  தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிட்டது.

இதற்கு மாணாக்கர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.  தமிழக அரசின்  அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, ஏஐசிடிஇ  (அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமதம்) தமிழகஅரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அஃபிடவிட் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீண்டும, சென்னை  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போதுஅரசு சார்பில்  ஆஜரான தலைமை வழக்கறிஞர், தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், அரியர் மாணவர்களுக்குடர்ந்து தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரியர் தேர்வு எழுத கட்டணம் கட்டணம் செலுத்தினால் தேர்ச்சி என்ற அரசின்  உத்தரவை ஏற்றுக் கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றதுடன்,  தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வாரியாக எத்தனை மாணவர்கள் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர் என்பது குறித்தும், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு  உத்தரவிட்டது.

மேலும்,   கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏதேனும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக்கழக மானியக்குழுவும் கலந்து பேசி ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.