சென்னை:

மிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெற்ற விசாரணையின்போது  தமிழக அரசின் கூடுதல் வழக்குறைஞர் அய்யாதுரை இந்த தகவலை தெரிவித்தார். இதுகுறித்த அரசாணை நாளை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி விவசாய விளை நிலங்கள் அனைத்தும் அங்கீகார மில்லாத வீட்டு மனைகளாக மாற்றப்பட்டன. எனவே, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என, வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக (லே-அவுட்) போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்வதற்கு கடந்தாண்டு செப்டம்பர் 9-ம் தேதி தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது,  கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும்,  அதேநேரம் அந்தத் தேதிக்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற நிலங்களை எக்காரணம் கொண்டும் மறுவிற்பனை செய்யக்கூடாது. இருப்பினும் தடை உத்தரவில் கொண்டு வரப்பட்ட மாற்றம் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

மேலும் அரசு புதிதாக வகுக்கும் கொள்கை முடிவைப் பொருத்தே அதுதொடர்பாக முடிவு செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது,  ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பாக வரைவு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு விட்டன.

இந்த வரைவு விதிகள் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன், விதிகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்படும். அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், வீட்டு மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்துக்கு தமிக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்த அரசாணை நாளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்து உள்ளது.

அதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர் நீதிபதிகள்.