சென்னை: தமிழ்நாட்டில் “தேசிய மாநிலத் தகுதித் தேர்வு”க்கான விண்ணப்பம் ரூ.2500வரை உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசின் நடவடிக்கை பகல் கொள்ளை என  பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாடு  முழுவதும்  கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான  ’’தேசியத் தகுதித் தேர்வு” பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் பங்கேற்ப தற்கான அதிகபட்சக் கட்டணமே ரூ.1150 வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில்  இதற்காக கட்டணம் சுமார் 60 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அதிகபட்சமாக ரூ.2500வரை வசூலிக்கப்படுகிறது. இது தேர்வு எழுதுபவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பகல்கொள்ளை என என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான விண்ணப்பக்கட்டணத்தை 66% உயர்த்தி அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவினருக்கான கட்டணம் ரூ.1500லிருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-லிருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500லிருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

இந்தியா முழுவதும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான ’’தேசியத் தகுதித் தேர்வு” பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்சக் கட்டணமே ரூ.1150 மட்டும் தான். அதைவிட இரு மடங்குக்கும் கூடுதலான கட்டணத்தை தமிழக அரசு வசூலிக்கிறது. தேசியத் தகுதித் தேர்வுக்கு பட்டியலினத்தவர்/பழங்குடியினரிடம் ரூ.325 வசூலிக்கப்படும் நிலையில், தமிழக அரசு அதை விட இரண்டரை மடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது பகல் கொள்ளையாகும்.

தகுதித் தேர்வு எழுதும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வேலையில்லாதவர்கள். அவர்களுக்கு வருவாய் ஆதாரம் எதுவும் கிடையாது. இந்தக் கட்டணத்தைச் செலுத்த அவர்களின் பெற்றோரைத் தான் எதிர்பார்த்திருப்பார்கள். அவர்களின் குடும்பமும் வறுமையில் வாடும் குடும்பமாக இருந்தால், இந்தத் தேர்வையே எழுத முடியாத நிலை உருவாகி விடும். மாணவர்கள் அவர்களின் கனவைத் தடுக்கும் வகையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்படுவதும்,அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் மன்னிக்க முடியாதவை.

தமிழ்நாட்டில் மாநிலத் தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கட்டணமாக குறைந்தது ரூ.30 கோடி வசூலிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது. கட்டணக் கொள்ளை நடத்தி மாணவர்களை சுரண்டும் செயலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தமிழக அரசு அரசும் கைவிட வேண்டும். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு 2024 இல் உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற் கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி, காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பொது விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 2500/-
BC/MBC/DNC விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 2000/-
SC/ST/SC(A)/PwD (VI, HI, PH ) விண்ணப்பதாரர்களுக்கு: ரூ. 800/-
மூன்றாம் பாலினத்தவருக்கு: கட்டணம் இல்லை
கட்டண முறை: நெட் பேங்கிங்/ டெபிட் கார்டு/ கிரெடிட் கார்டு/ யுபிஐ மூலம்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 01-04-2024
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30-04-2024 (மாலை 05:00 மணி வரை)
தேர்வுக் கட்டணத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி (கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/நெட் பேங்கிங்/UPI மூலம்): 02-05-2024 (இரவு 11:50 மணி வரை)
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் உள்ள விவரங்களில் திருத்தம்: 03 & 04-05-2024 (இரவு 11:50 மணி வரை)
தேர்வு மையத்தின் அறிவிப்பு: மே 2024 இரண்டாவது வாரம்
பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தல்: மே 2024 மூன்றாம் வாரம்
தேர்வு தேதி: 03-06-2024 முதல் 25-06-2024 வரை (தேர்வு)
தேர்வு மையம், தேதி மற்றும் ஷிப்ட்: ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து சவாலை(களை) அழைப்பதற்காக இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட பதில்கள் மற்றும் தற்காலிக பதில் விசைகள் காட்சி: இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணையதளத்தில் முடிவு அறிவிப்பு: இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.