சென்னை

மிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ”இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட  உள்ளது.  வாக்குச்சாவடி அலுவலர்கள் ஜூலை 21-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி வரை வீடு தோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பிறகு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி வரை வாக்குச்சாவடிகளைத் திருத்தியமைத்தல், மறுசீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் உள்ள மங்கலான, மோசமான, தரமற்ற, குறிப்பிடத்தகுந்த மற்றும் மனிதரல்லாத படங்களை மாற்றி நல்ல தரமான புகைப்படங்களை உறுதி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அக்டோபர் மாதம் 17-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும்.

www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.

1.1.2024, 1.4.2024, 1.7.2024 மற்றும் 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கச் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பப் படிவத்தை அளிக்கலாம்.

இடம் பெயர்தல், திருத்தம், வாக்காளர் அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று வாக்காளர் அட்டை பெற வேண்டியிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.”என அறிவித்துள்ளார்.