சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், ஓய்வுபெற்ற ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று, ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த  அப்போலோ மருத்துவமனை  நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில்,  ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது என குற்றம் சாட்டி உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், வீட்டு வேலைக்கார்கள் உள்பட அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி உள்ளது. ஆனால், அப்போலோ நிர்வாகம் மட்டும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வருகிறது. இதனால் அப்போலோ நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து,  ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு தடை கேட்டு அப்பல்லோ சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசா ரணையைத் தொடர்ந்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், தமிழக அரசு பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், அப்போலோ வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,  ஜெயலலிதா மரண விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் எதையோ மறைக்க நினைக்கிறது என  தெரிவித்து உள்ளது. மேலும், அப்பலோ மருத்துவமனை மீது ஏதேனும் தவறு கண்டுபிடிக்கப்பட்டு விடுமோ என்பதால் விசாரணைக்கு தடை கோருகின்றனர். எனவே ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.