சென்னை

மிழகத்தை பிரிக்க முயன்றால் அதை எதிர்த்து கடும் போராட்டம் நடக்கும் எனத் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என புதிய மாநிலம் அமைக்க உள்ளதாக பாஜகவினர் தகவல்கள் வெளியிட்டு வருகின்றனர்.   இது குறித்து மத்திய அரசு எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.  ஆனால் சமூக வலைத்தளங்களில் இது குறித்து நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,  ”தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களைப் பிரித்து கொங்கு நாடு என்ற பெயரில் புதிய மாநிலத்தை உருவாக்குவது பற்றி இந்திய அரசு ஆராய்ந்து வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருக்குமானால், அதை எதிர்த்துத் தமிழர்கள் மிகக் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு எனப் பிரித்து இரு மாநிலங்களாக்கும் கோரிக்கையைச் சிலர் எழுப்பினர். அப்போது தமிழர்களின் கடும் எதிர்ப்பின் விளைவாக அத்தகைய கோரிக்கை கைவிடப்பட்டது. தமிழகம் சங்க காலத்திலிருந்து 1956ஆம் ஆண்டு மொழி வழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட காலம் வரை என்றும் ஒரே நாடாக இருந்ததில்லை.

மூவேந்தர்களும், வேறு பல மன்னர் குலத்தினரும் பிரித்து ஆண்ட சிறுசிறு நாடுகளாகத்தான் திகழ்ந்தது. பிறகு, அந்நியர்களின் படையெடுப்புக்கு ஆளாகி அடிமைப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணம் என்ற கூண்டிற்குள் தமிழகம் அடைக்கப்பட்டுத் தவித்தது. கடந்த 1956ஆம் ஆண்டில்தான் தமிழ்நாடு முதன்முதலாக ஒன்றுபட்ட மாநிலமாக ஆக்கப்பட்டது.

அப்போது சில பகுதிகளை நாம் இழக்க நேரிட்டது. தமிழகத் தமிழர்களும், உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவரும் இவ்வேளையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒன்றுபட்டு நின்று போராடாவிட்டால், நம்மையும் காப்பாற்றிக்கொள்ள முடியாது, நம்மை நம்பியிருக்கிற உலகத் தமிழர்களையும் காக்க முடியாது.

ஆகவே, தமிழ்நாட்டைப் பிரிக்கும் செயல் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடத் தயாராகுமாறு அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.