சென்னை: முதலமைச்சரின் 4 செயலாளர்களில் ஒருவரான அனு ஜார்ஜ் விடுமுறையில் செல்வதை முன்னிட்டு,உதயசந்திரன் உள்பட 3 செயலாளர்களுக்கு அவரது துறைகள் பிரித்து ஒதுக்கீட்டு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கீடு செய்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனு ஜார்ஜிடம் இருந்த 12 துறை களும் மற்ற செயலாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர்களாக 4 பேர் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் உதயசந்திரன் ஐஏஎஸ், உமாநாத் ஐஏஎஸ், சண்முகம் ஐஏஎஸ், அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் ஆவர். இவர்கள் நான்கு பேருக்கும் தனித்தனியே துறைகள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நான்காவது தனி செயலாளராக இருக்கும் அனு ஜார்ஜ் சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்லவிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் வசமுள்ள 12 துறைகளை பிரித்து பிற தனி செயலாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி,

உதயசந்திரன் ஐஏஎஸ்க்கு கூடுதலாக மூன்று துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை, சுற்றுலா, சுற்றுச்சூழல் ஆகியவை ஆகும்.

உமாநாத் ஐஏஎஸ்க்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாடு ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சண்முகம் ஐஏஎஸ்-க்கு முதல்வரின் சந்திப்புகள், கால்நடை மற்றும் மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சமூக சீர்திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளை  கவனிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.