சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினத்தையொட்டி,  தி.மு.க சார்பில்  பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில்  இன்று அமைதி பேரணி நடைபெற்றது.  பேரணி முடிவில், மெரினாவில் உள்ள  அண்ணா நினைவிடத்தில் மரியாதை செய்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும், திமுக, அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,  இன்றைய அமைதி பேரணி  தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில்  சென்னை  திருவல்லிக் கேணி – வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகை’ அருகில் தொடங்கிய இந்த அமைதிப்பேரணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்துகொண்டனர்.  பேரணி  அண்ணா நினைவிடத்தை அடைந்ததும்,  தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

இந்த அமைதிப் பேரணியில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.